வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, April 25, 2011

திமுகவை விமர்சிக்காமல் ஒரு மே தின விழாவா?: ஜெயலலிதா

சென்னை: திமுக அரசின் தொழிலாளர் விரோதச் செயல்களை சுட்டிக்காட்டாமல் “மே” தின பொதுக் கூட்டங்களை நடத்துவது என்பது இயலாத ஒன்று. இதனால் அதிமுக சார்பில் நடைபெற இருந்த மே தின விழா கொண்டாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் “மே” தினத்தன்று அதிமுக சார்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் ஆண்டுதோறும் "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடத்தப்படுவதும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த தொழிலாளர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதும் வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் உழைப்பின் மேன்மையை, உழைப்பவரின் உரிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், மே தினத்தை கழகத்தின் சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடவும், ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்தவும், நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும் திட்டமிடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், இது போன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் போது, எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்து பேசக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளும் திமுக அரசின் தொழிலாளர் விரோதச் செயல்களை சுட்டிக்காட்டாமல் “மே” தின பொதுக் கூட்டங்களை நடத்துவது என்பது இயலாத ஒன்று.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் வாக்குப் பதிவிற்குப் பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

எனவே, தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மதிப்பளிக்கும் வகையிலும், பேரவை தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகு, அதிமுக சார்பில் மே தினத்தை சிறப்பாக கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, அதிமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம் நடைபெறும் தேதி மற்றும் நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் தேதி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment