வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, March 19, 2011

சச்சினைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருந்தால் எப்படி?-கபில் தேவ் எரிச்சல்

மும்பை: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இந்தியா நன்றாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒட்டுமொத்த இந்தியர்களையும் மனதில் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு சச்சினைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் எப்படி என்று கோபமாகவே கேட்டுள்ளார் கபில் தேவ்.

இந்தியா இதுவரை ஒரே ஒரு உலகக் கோப்பையை (50 ஓவர் போட்டியில்) மட்டுமே வென்றுள்ளது. அதை வென்று கொடுத்த அணியின் கேப்டனாக இருந்தவர் கபில் தேவ். புயல் வேக வீரரான கபில் தேவுக்குப் பின்னர் இந்தியாவுக்கு கோப்பை என்பது கனவில் மட்டுமே வந்து செல்கிறது.

இந்த நிலையில் நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர். சொல்லி வைத்தாற் போல அத்தனை பேரும் சச்சினைப் பற்றி மட்டுமே பெரிதாக பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றனர். இது சச்சினுக்கான போட்டி, இதை சச்சினுக்காக ஆடப் போகிறோம், சச்சினுக்கு நாங்கள் கொடுக்கப் போகும் பெரிய பரிசே இதுதான் என்ற ரேஞ்சில் பேசி வருகின்றனர்.


இதுகுறித்து கபில் தேவ் எரிச்சலை வெளியிட்டுள்ளார். உலகக் கோப்பையை வெல்வது சச்சினுக்காக மட்டும்தானா. இந்தியர்களுக்காக இல்லையா என்று அவர் சற்று காட்டமாகவே கேட்டுள்ளார்.

உலகக் கோப்பையை இதற்கு முன்பு வென்ற அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் கபில் தேவும் கலந்து கொண்டார்.

அப்போது பலரும் சச்சினைப் பற்றியே கேள்விகள் கேட்டனர். கபில் தேவிடமும் கேட்டனர். சச்சினுக்கு இந்த உலகக் கோப்பைப் போட்டி எந்த அளவு முக்கியமாக இருக்கும் என்று கேட்டனர்.

இதைக் கேட்ட கபில் தேவ், ஏன் சச்சின் மட்டும். திரும்பத் திரும்ப சச்சினைப் பற்றி மட்டுமே நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இங்கு உள்ள அனைவரையும் அவமானப்படுத்துவது போல உள்ளது. உலகக் கோப்பையை வெல்வது என்பது, சச்சினுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் முக்கியமானது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. கோடானு கோடி இந்தியர்களும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களயெல்லாம் விட்டு விட்டு சச்சினைப் பற்றி மட்டுமே பேசுவது எப்படி சரியாக இருக்கும். சச்சின் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல இது.

சச்சின், சச்சின் என்று கூறி அவர் மீது நிறைய பாரத்தை ஏற்றி வைத்து எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டுள்ளனர். கோடானு கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பு அனைத்துமே ஒன்றே ஒன்றுதான் -அது இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே. அதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும் என்றார் கபில் தேவ்.

கபில் சொல்வதும் சரிதானே. சச்சின் ஒரு ஸ்டார் வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பைப் போட்டியாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அவருக்காக கோப்பையை வென்று தர வேண்டும் என்று கூறுவதிலும் தவறில்லை.

அதேசமயம் சச்சின் ஏதோ கெஸ்ட் போலவும், அவரை உட்கார வைத்து விட்டு மற்றவர்கள் மட்டுமே உலகக் கோப்பை போட்டியில் விளையாடப் போவது போலவும் பேசி வருவதுதான் கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களை சற்று எரிச்சல்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

உண்மையில் சச்சின் டெண்டுல்கரும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். இவ்வளவு சிறந்த வீரராக இருந்தும் இதுவரை சச்சினால் உலகக் கோப்பை நமக்கு வாய்க்காமலேயே போய் விட்டது. இந்த முறையாவது சச்சின் மூலமாக உலகக் கோப்பை வந்தால் அது நிச்சயம் இந்தியாவுக்கு மட்டுமல்ல சச்சினுக்கும் மிகப் பெரிய பெருமை.

காரணம், கபில் தேவ் காலத்தில் அவரை விட, அப்போது இருந்த இந்திய அணியை விட மிகச் சிறந்த வீரர்கள் இருந்தனர், மிகச் சிறந்த அணிகள் இருந்தன. ஆனால் கடுமையான முயற்சி, திட்டமிட்ட செயல்பாடு, பேச்சளவில் இல்லாமல் செயல் அளவிலும் சீறிப் பாய்ந்தது போன்றவற்றால்தான் கபில் தேவ் தலைமையிலான அணியால் சாதிக்க முடிந்தது.

கபில் தேவ் காலத்திற்குப் பிறகு இந்திய பல அருமையான வீரர்களைக் கண்டுள்ளது -சச்சின் உள்பட. ஆனால் ஒரு முறை கூட நம்மால் கோப்பையை வெல்ல முடியவில்லை. காரணம், சிறந்த வீரர்கள் இருந்தாலும் கூட ஒற்றுமையின்மை மிக முக்கியப் பிரச்சினையாக போன காரணத்தால்.

எனவே, சச்சினைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு அத்தனை பேரும் சேர்ந்து சிறப்பாக ஆடி, இந்த முறையாவது கோப்பையை வெல்ல முயல வேண்டும். இந்த ஆதங்கம்தான் கபில்தேவ் பேச்சில் தெரிவதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment