வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, December 25, 2010

செவ்வடையான மசால்வடையே! - எல்லே ராம்


செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக் குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!


ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும் கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.

‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!

’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?

இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!

பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?

ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.

சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:

”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”

ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.

”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. 'ஆறு' என்றால் வழி; 'ஆற்றுப்படுத்துதல்' என்றால் 'வழிகாட்டுதல்'. 'ஆற்றுவடை' என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, "அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்" என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.

’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட 'ஆறுபடை வீடு' அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், 'ஆறு திருப்பதி' 'அறுபத நிலை' 'ஆறு நிலை' போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. 'ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே' என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்... ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”

இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.

இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.

சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.

’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’

ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.

திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:

”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.

’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.

இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.

சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”

சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”

வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.


”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”

”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்‌ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”

இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?

”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”

இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.

“இந்த மசால் வடை - செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.

இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.

செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?

இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.

ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.

நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”

எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.

இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!


( நன்றி: இந்த வார கல்கி )


இதோ வடை என்று வந்திருக்கே என்று இந்த பதிவு :-) 

0 comments:

Post a Comment